உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.
பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,
மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.
இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.
1. இளமையில் கல்வி
இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.
2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்
நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.
Read the rest of this entry »